தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க 19 ஆம் தேதி விவரம் அறிவிப்பு: கே.ஏ. செங்கோட்டையன்

வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது குறித்து வருகின்ற 19 ஆம் தேதி
தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்க 19 ஆம் தேதி விவரம் அறிவிப்பு: கே.ஏ. செங்கோட்டையன்

ஈரோடு: வெளிமாவட்டங்களில் தங்கி உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது குறித்து வருகின்ற 19 ஆம் தேதி தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தமிழகம் அரசின் நடவடிக்கைகளால் கரோனா இறப்பு எண்ணிக்கையில் குறைந்த மாநிலமாக உள்ளது. ஈரோடு மாவட்டம் மக்களின் ஒத்துழைப்பால் கடந்த 29 நாட்களாக புதிதாக கரோனா தொற்று எதுவும் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு யுடியூப், கல்வி சேனல் ஆகியவற்றின் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன 1 ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. 

இந்நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று போக்குவரத்து முடக்கத்தால் அங்கேயே தங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்ற 19 ஆம் தேதி இது போன்ற பிரச்னைகளை தீர்க்க என்ன நடவடிக்கை எடுப்பது என்று குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும். 

10 ஆம் வகுப்பு தேர்வுகளை 1 ஆம் தேதி நடத்துவது மாணவர்கள், பெற்றோர்கள் நலன் கருதி கல்வியாளர்கள் குழு ஆலோசனையின்படி தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முதல்வரின் ஒப்புதல் பெற்றுத்தான் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறிப்பாக குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் தேர்வுகள் முடிவுற்று விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள  மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஆட்சியர்கள்  தேர்வு மையங்களை பார்வையிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

மாணவர்களை நேரடியாக தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று, திரும்பவும் கொண்டு வந்து விடுவதற்கான ஏற்பாடுகளை ஆட்சியர்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்காக ஆன்லைன் மூலம் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் ஆசிரியர்களுக்கும் இருவார பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடித்ததும் மாணவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பயிற்சியின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். இதில் ஏறக்குறைய 3,000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை தேர்வு செய்துள்ள 10 கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார். 

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com