பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக கூறி ஆளுநர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், சட்டங்களுக்கு உள்பட்டு விடுதலை குறித்து குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என்று ஆளுநர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு பிப்ரவரி 9ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேர் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவர்களை விடுதலை செய்ய அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகின்றன.
அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.