உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பத்து நாள்கள் திருவிழாவிலும் பகலில் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பக்தர்கள் அன்னையை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி திருவிழா நிறைவுபெறும்.
10 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த திருவிழாவில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பனிமயமாதா அன்னையை தரிசனம் செய்வார்கள்.
கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி வழங்கவில்லை. இந்த ஆண்டு 26-ஆம் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது.
இது குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி மற்றும் அருட்தந்தைகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் அந்தோணி செய்தியாளர்களிடம் பேசும்போது: கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு வரும் 26-ஆம் தேதி திருவிழா கொடியேற்றம், விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை பக்தர்கள் இன்றி அருள்தந்தைகள் கொடி ஏற்றி திருவிழாவை தொடங்கி வைக்க உள்ளனர். பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முககி கவசம் அணிந்து அன்னையை தரிசிக்க அனுமதி வழங்கப்படும்.
மேலும் திருவிழாக் கடைகள் பொருள்காட்சிகள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்தார். இந்த ஆண்டு அன்னை தேர்பவனி நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். இந்த திருவிழாவிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.