நியாயமான விலையில் மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு தவறிவிட்டதாக கேரள உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு குற்றம்சாட்டியுள்ளது.
தடுப்பூசியை விரைவாகவும் இலவசமாகவும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கேரள சட்டப்பேரவையில் முன்வைத்தார்.
140 உறுப்பினர்களை கொண்ட கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
மேலும் தீர்மானத்தில், தடுப்பூசிகளை மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளுமாறு கூறியது தவறு என்றும், பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே கேரள உயர்நீதிமன்றத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து விசாரிக்கப்பட்ட வழக்கில்,
மாநிலங்களுக்கு நியாமான விலையில் தடுப்பூசி விநியோகப்பதில் மத்திய அரசு தோற்றுவிட்டதாகவும், கள்ளச் சந்தையில் மருந்து விற்பதற்கு ஊக்குவிப்பதாகவும் மாநில அரசு குற்றம்சாட்டியது.
இந்த வழக்கில் பேசிய நீதிபதிகள், மாநில அரசுகளுக்கு கிடைக்காத தடுப்பூசி எவ்வாறு தனியார் மருத்துவமனைகளுக்கு கிடைக்கின்றது என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரியதையடுத்து வழக்கு அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.