சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஒடிசாவிலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் உடல்நலன் தேர்வைவிட முக்கியம் என்பதால் ஒடிசா மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
முன்னதாக குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.