கோவாவில் நாளை முதல் மே 3 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவாவிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே கோவா முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை இரவு 7 மணிமுதல் மே 3 வரை முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக முதல்வர் பிரமோத் அறிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கின் போது அத்தியாவசிய சேவைகள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.