நாட்டில் 60.35 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதாரத்துறை
விரைவாக 60 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி உலகளவில் இந்தியா சாதனை படைத்துள்ளது.
மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கின. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,23,298 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணிநேரத்தில் 2,23,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 60,35,660 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதில் சுகாதாரப் பணியாளர்கள் 54,12,270 பேருக்கு, 6,23,390 பிற முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், 24 நாள்களில் 60 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இத்தனை நபருக்கு தடுப்பூசி செலுத்த அமெரிக்காவுக்கு 26 நாள்கள், பிரிட்டனுக்கு 46 நாள்கள் ஆனது.