சிக்கிம் எல்லையில் பனிப்புயலில் சிக்கிய 447 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் மீட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
சிக்கிமில் இந்தியா - சீனா எல்லைப் பகுதியான நாது-லாவில் வியாழக்கிழமை கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதில் சிக்கிய 155 வாகனங்களில் வந்த 447 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினரால் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் பி.கோங்சாய் தெரிவித்தார்.
மேலும், மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர சிகிச்சைக்காக 26 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அல்லது பெரிய காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.
கடுமையான வானிலை இருந்த போதிலும், துணிச்சலாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கிய ராணுவ வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
கிழக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள நாது-லா உலகின் மிக உயரமான சாலைகளில் ஒன்றாகும். இது கடல் மட்டத்திலிருந்து 14,450 அடி உயரத்தில் இந்தோ-திபெத்திய எல்லையில் அமைந்துள்ள இமயமலை சிகரங்களில் உள்ள ஒரு மலைப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது.