காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நவம்பர் மாதம் வடமாநில ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் அகில இந்திய தலைவர் டி.பி.சேகர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த அவர் தரிசனத்துக்கு பின்னர் செய்தியாளர்தளிடம் தெரிவித்தாவது: சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ அமைப்பு இந்தியாவில் 18 மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைத்து சமுதாய சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தவும் சபரிமலை சந்நிதானத்தின் மகத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுமே இதன் நோக்கமாக இருந்து வருகிறது.
வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள காமாட்சி சத்திரத்தில் வடமாநில ஐயப்ப பக்தர்களுக்கான ஒருநாள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் வட மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐயப்ப குருசாமிகள், ஐயப்ப பக்தர்கள் பலரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
பயிற்சி முடித்த இவர்கள் அவரவர் ஊர்களுக்கு சென்று ஐயப்பனுக்கு பூஜை செய்யும் விதங்கள், மகத்துவங்கள் ஆகியன குறித்து பயிற்சியளிக்கப்படும். இந்த மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
இந்த மாநாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார், காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் மற்றும் காஞ்சிபுரம் நகர முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். நிறைவு நாளன்று காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்துகொண்டு நிறைவுரை ஆற்றி ஆசி வழங்கிடவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமாஜம் காஞ்சிபுரம் மாவட்ட கிளையின் தலைவர் காஞ்சி ஜீவானந்தம் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர் என்று டி.பி.சேகர் கூறினார்.
பேட்டியின்போது வட மாநிலம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஐயப்ப சேவா சமாஜத்தின் அமைப்புச் செயலாளர் துரை சங்கர், காஞ்சி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட பலரும் உடன் இருந்தனர்.