சென்னை கொடுங்கையூரில் திமுக நிர்வாகி தமிழன் பிரசன்னாவின் மனைவி தூக்கிட்டு இறந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா. இவர் திமுக கட்சியின் செய்தி தொடர்பு இணைச் செயலாளராக உள்ளார். பிரசன்னாவின் மனைவி நதியா (35). இத்தம்பதிக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. 3 குழந்தைகள் தம்பதிக்கு உள்ளன.
இந்நிலையில் நதியா, செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த பிரசன்னா, பக்கத்து வீட்டினர் உதவியுடன் நதியாவை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றார்.
அங்கு நதியாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கொடுங்கையூர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனர்.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், நதியாவுக்கு செவ்வாய்க்கிழமை பிறந்தநாள் என்பதால், பிறந்தநாள் கேக் வெட்டி அதை புகைப்படம் எடுத்து முகநூலில் போட வேண்டும் என கூறியிருப்பதும், அதற்கு பிரசன்னா கரோனா என்பதால் பிறந்தநாள் கொண்டாட்டம் எதுவும் வேண்டாம் என தெரிவித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் விளைவாக விரக்தியடைந்த நதியா தற்கொலை முடிவுக்கு சென்றிருப்பாரா என்றக் கோணத்தில் காவல்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.