பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியின் வேட்புமனுவை தள்ளுபடி செய்யக்கோரி திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இதில் போட்டியிட, நந்திகிராம் தொகுதியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவருக்கு எதிராக திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், சுவேந்து அதிகாரி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவரது வீடு குறித்த தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதால், அவரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்யக்கோரி திரிணமூல் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன், கடந்த வாரம் மம்தாவின் வேட்புமனுவில் 6 வழக்குகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படாததால், அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்யக்கோரி சுவேந்து அதிகாரி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.