சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வியாழக்கிழமை உலக சாதனை பட்டியலில் இடம்பெரும் நோக்கில் மாணவிகள் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
சிலம்பு சுற்றல் நிகழ்ச்சியை கல்லூரிச் செயலர் வி.எம்.ஜபருல்லாகான் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். கல்லூரி வளாகத்தில் மாணவிகள் 40 பேர் இரண்டு மணிநேரம் தொடர்ந்து இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.
இந்நிகழ்சசியில் சென்னை நோபில் உலக சாதனை நிறுவனத்தின் தலைமை மேலாளர் அரவிந்த் லட்சுமி நாராயணன் மாணவிகள் சிலம்பம் சுற்றுவதை பார்வையிட்டார். சிலம்பம் சுற்றும் நேரம் முடிவடையும்போது கல்லூரிப் பேராசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிலம்பம் சுற்றிய மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரிசாளிப்பு விழாவில் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் சபினுல்லா கான், சட்டகளம் பத்திரிகை ஆசிரியர் முஹம்மது அலி ஜின்னா, சிலம்பம் பயிற்சியாளர் மற்றும் மாநில நடுவர் சுதர்சன், கல்லூரி ஆட்சிக்குழு நிர்வாகி அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக், அப்துல் சலீம் உட்பட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.