சீர்காழி:சீர்காழி நகர்மன்றத் தலைவர் தேர்தல் நகர மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. நகராட்சியில் உள்ள 24 வார்டு உறுப்பினர்களின் 21வது வார்டு உறுப்பினர் முழுமதி தவிர மற்ற அனைவரும் தேர்தலில் பங்கேற்றனர். திமுக சார்பில் துர்கா பரமேஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை திமுக நகர்மன்ற உறுப்பினரான பாஸ்கரன் முன்மொழிந்தார். அதேபோல் தேமுதிக நகர்மன்ற உறுப்பினர் ராஜசேகரன் வழிமொழிந்தார். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் துர்கா பரமேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்ட துர்கா பரமேஸ்வரிக்கு சீர்காழி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இப்ராகிம் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அருகில் மேலாளர் காதர் கான், பணி தள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். புதிதாக பதவியேற்ற நகர்மன்றத் தலைவருக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் வாத்திய முழக்கத்துடன் ஊர்வலமாக சென்று பெரியார், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.