நான் நினைத்திருந்தால் எப்போதோ அதிகம் சம்பாதித்திருப்பேன்: அரவிந்த் கேஜரிவால்
பாஜக மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதால் அவர்களால் யாரை வேண்டுமானாலும் சிறைக்கு அனுப்ப முடியும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
என்னை கைது செய்யக் கூறி மத்திய விசாரணை அமைப்புகளுக்கு பாஜக உத்தரவிட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ட்விட்டரில் 5 நிமிட விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவில் அவர் பேசி இருப்பதாவது: தில்லி கலால் கொள்கை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பதிலளிப்பேன். இந்த விஷயத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. சிபிஐ அதிகாரிகளால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நான் அவர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிப்பேன். இவர்கள் (பாஜக) மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். குற்றம் செய்தவர்கள் குற்றம் செய்யாதவர்கள் என அவர்களால் யாரை வேண்டுமானாலும் சிறைக்கு அனுப்ப முடியும்.
நேற்றிலிருந்து அவர்கள் அனைவரும் கேஜரிவால் கைது செய்யப்படுவார் என பேசி வருகின்றனர். சிபிஐ அதிகாரிகளுக்கு கூட என்னை கைது செய்யக் கூறி உத்தரவிட்டிருப்பார்கள் என நினைக்கிறேன். பாஜக சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டளையிட்டால், அவர்கள் என்னை கைது செய்யப் போகிறார்கள். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு அவர்கள் அனைவரையும் மிரட்டி வருகிறார்கள். கேஜரிவால் ஊழல்வாதி நீங்கள் கூறுவீர்களானால், நான் முன்னதாக வருமானவரித் துறையில் பதவியில் இருக்கும்போதே அதிக அளவிலான பணத்தை சம்பாத்திருக்கலாம் எனப் பேசியுள்ளார்.