
ஆலங்காயம் அருகே மலை கிராமத்தில் காயத்துடன் சுற்றித் திரியும் காட்டு யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வனச்சரக்கத்திற்குட்பட்ட காவலூர், நாயக்கனூர், ஆர்.எம்.எஸ் புதூர் உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில், ஒற்றைக் காட்டு யானையின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யானையின் கால் பெரிதாக வீங்கி, நடக்க முடியாத நிலையில் சாலையோர பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் நிற்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆலங்காயம் மற்றும் ஜமுனாமரத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சுற்றிவரும் இந்த ஒற்றைக் காட்டு யானை இதுவரை எந்த ஒரு நபரையும் அருகில் சென்றபோதும் தாக்கியதே இல்லை என்றும் இந்த யானைக்கு ஒரே ஒரு தந்தம் இருக்கின்ற காரணத்தினால், இதனை அப்பகுதியினர் ஒற்றைக் கொம்பன் என்றும் அழைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது அந்த யானை காலில் அடிபட்டு நடக்க முடியாத சூழ்நிலையில் அவதிப்பட்டு வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
யானை ஊருக்குள் புகுந்து விவசாய நிலத்தில் சுற்றி திரிகிறது என்று வனத்துறைக்கு தகவல் அளித்தால் தகவல் அறிந்து வரும் வனத்துறையினர் யானையை துரத்தி விட முயற்சி எடுக்கிறார்கள் தவிர அடிபட்டு காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர். எனவே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அந்த யானையை காட்டிற்குள் துரத்தாமல் ஒற்றை கொம்பன் யானையைப் பிடித்து மருத்துவ சிகிச்சை அளித்து பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.