கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி உறுதி என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக 130-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார். தனியார் பத்திரிகையின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
அந்த நேர்காணலில் அவர் பேசியதாவது: சிலர் கட்சியிலிருந்து விலகினாலும் தொண்டர்கள் பாஜகவுடன் உள்ளார்கள். கலகம் செய்பவர்கள் ஜெயிப்பதில்லை என்பது வரலாறு. இந்த முறை கர்நாடக பேரவைத் தேர்தலில் அது மீண்டும் உறுதியாகப் போகிறது. எந்த ஒரு குடும்பமும் சட்டத்துக்கு மேலானது கிடையாது. அனைவரை விடவும் சட்டம் மேலானது. நாங்கள் யாரும் ராகுல் காந்தியை இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவமதிக்கும் விதமாக ஒரு போதும் பேச சொல்லவில்லை. அவர் மன்னிப்புக் கேட்கக் கூடாது என அவரே முடிவெடுத்து விட்டார். அவர் குற்றவாளி என கூறியுள்ள சட்டம் காங்கிரஸ் அரசினால் கொண்டுவரப்பட்டதே ஆகும். இந்த சட்டத்தினை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திரும்பப் பெறலாம் எனக் கூறினார். ஆனால், அந்த அவசரச் சட்டத்தின் தாள்களை ராகுல் காந்தி கிழித்தெறிந்தார். அந்த அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார் என்றார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.