எம்.பி. அதிக் அகமதுவின் வழக்குரைஞரை கொல்ல முயற்சி? காவல் துறை மறுப்பு
By DIN | Published On : 18th April 2023 06:53 PM | Last Updated : 18th April 2023 06:53 PM | அ+அ அ- |

உத்தரப் பிரதேசத்தில் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. அதிக் அகமதுவின் வழக்குரைஞரையும் பெட்ரோல் வெடிகுண்டு வீசிக் கொல்ல முயற்சித்ததாக சமூக வலைதளங்களில் விடியோ பரவியது.
உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அதிக் அகமது, அவரின் சகோதரா் அஷ்ரஃப் ஆகியோா் பிரயாக்ராஜ் சிறையிலிருந்து சட்டமுறைகளின் படி மருத்துவ பரிசோதனைக்காக காவல் துறையினா் அழைத்துச்சென்றனர்.
அப்போது ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டி கொடுத்தனர். அப்போது செய்தியாளர்கள்போல் இருந்த மூவர் அதிக்கையும் அஷ்ரஃப்பையும் நோக்கி சரமாறியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக லவ்லேஷ் திவாரி (22), மோஹித் (23), அருண் மெளா்யா (18) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எம்.பி. அதிக் அகமதுவின் வழக்குரைஞரை கொல்லும் நோக்கத்தில் அவரின் வீட்டருகே பெட்ரோல் குண்டு வீசியதாக சமூகவலைதளங்களில் விடியோ பரவியது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எம்.பி. அதிக் அகமது வழக்குரைஞரை தாக்கும் நோக்கத்தில் வெடிகுண்டு வீசப்படவில்லை. அந்த விடியோ மூலம் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இந்த வெடிகுண்டை வீசும் நபர் ஹர்ஷித் சோன்கரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் வேறு ஒரு நபர் மீது வெடிகுண்டை வீசியதாக வாக்குமூலம் அளித்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.