மணிப்பூரின் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது எனவும், மணிப்பூரின் சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தினருக்கும், பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியுள்ளது. மணிப்பூரில் ஏற்பட்ட இந்த பயங்கர கலவரத்தினால் இதுவரை 9000 பேர் அவர்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பித்து அந்த மாநில ஆளுநர் அனுசியா உய்கே உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், மணிப்பூரின் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவது மிகவும் கவலையளிக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை பார்ப்பதற்கு மனதுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. மணிப்பூர் சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். மேலும், மணிப்பூரில் இயல்பு நிலையை அவர் கொண்டு வர கவனம் செலுத்த வேண்டும்.இந்த தருணத்தில் மணிப்பூர் மக்கள் அமைதியாக இருக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.