பாரிஸ் ஒலிம்பிக்: மேரி கோம் பொறுப்பு விலகல்!

மேரி கோம் பாரிஸ் ஒலிம்பிக் பொறுப்பிலிருந்து விலகல்
மேரி கோம்
மேரி கோம்

ஆறு முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், பாரிஸ் ஒலிம்பிக்குக்குச் செல்லும் இந்திய வீரர்கள் குழுவுக்கான தலைமை பொறுப்பில் இருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பிடி உஷா, பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மேரி கோம் கடிதம் மூலம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேரி கோம் எழுதிய கடிதத்தில், “நாட்டுக்காக சேவை செய்வது எனக்குக் கிடைத்த பெருமை. நான் மனரீதியாக தயாராக இருந்தேன். இருந்தபோதும் மதிப்புமிக்க இந்தப் பொறுப்பை என்னால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. அதற்காக வருந்துகிறேன். தனிப்பட்ட காரணங்களினால் இந்த பொறுப்பிலிருந்து விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மார்ச் 21-ம் தேதி இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு மேரி கோமை தலைமை பொறுப்பில் நியமித்த அறிவிப்பை வெளியிட்டது.

2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மேரி கோம், இந்தாண்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் இந்திய வீரர்களின் குழுவுக்கு தலைமை பொறுப்பு வகிக்க நியமிக்கப்பட்டார்.

பிடி உஷா, “மேரி கோம் விலகுவது வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் அவரது தனியுரிமையை மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார். மேரி கோமுக்கு பதிலாக பொறுப்பு வகிப்பவர் குறித்து தகுந்த ஆலோசனைக்கு பிறகு முடிவு அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு இது வரை 40-க்கும் அதிகமான இந்திய வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com