சிலமாதங்களுக்கு முன்பு சுப்ரமணியன் சுவாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் போது அந்தக் கடிதத்துடன் என்டிடிவி யின் நிதி முறைகேடுகளை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி இருந்தாராம்.
மார்ச் 8, 2010 ஆம் ஆண்டில் ரிலயன்ஸ் குழுமத்தைச் சார்ந்த நிறுவனங்களில் ஒன்றான VCPL நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தொகை Shell நிறுவன வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் பட்டிருந்தது. Shell நிறுவனத்தில் என்டிடிவி துணை நிறுவனர் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி இருவரும் 50 % பங்குதாரர்கள். பரிமாறப்பட்ட தொகையானது சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் என் டி டி வி யின் பங்கை 26% லிருந்து 29.19 % மேலும் அதிகப் படுத்தும் வகையில் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா இருவரது தனிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இது குறித்த ஆதாரங்கள் அனைத்தையும் சுப்ரமணியன் ஸ்வாமி பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இணைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.
மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் வாயிலாக ரூ.2030 கோடிகள் மற்றும் ரூ.640 கோடிகள் என பணப்பரிமாற்றம் நிகழ்ந்து அது எப்படி என் டி டி வி வங்கிக் கணக்குகளில் சேர்ந்தது என்பது குறித்தான ஆதாரங்களையும் கூட ஸ்வாமி முன்னதாக தெரிவித்திருந்தாராம்.
இது குறித்து ANI க்கு அளித்த பேட்டியில் சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்ததாவது;
“ சட்டத்தின் முன் நீங்கள் யார் என்பது முக்கியமில்லை. சட்டத்திற்கு அஞ்சும் மனப்பான்மை அனைவருக்கும் அவசியமான ஒன்று’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா மட்டுமல்ல என் டி டி வியின் பிற பங்குதாரர்களான பர்கா தத், சோனியா சிங், விக்ரம் சந்திரா உள்ளிட்டோரையும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இவர்களும் வெளி நாட்டு நிறுவனங்கள் மூலம் தமது சொந்த வங்கிக் கணக்கில் முறைகேடாகப் பணப்பரிமாற்றம் செய்த குற்றத்துக்கான ஆதாரங்கள் உள்ளன என சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.
சிபிஐ ரெய்டு குறித்து என் டி டி வி நிர்வாகத் தரப்பில் கூறப்பட்ட பதிலில்; “தங்களது துணை நிறுவனர் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் மேல் சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. மத்திய அரசு உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இம்மாதிரியான சூனிய வேட்டைகளை சுதந்திரமாகச் செயல்படும் தங்களைப் போன்ற ஊடகத்தினர் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதற்காக அஞ்சி நாங்கள் ஓய்ந்து விட மாட்டோம். தொடர்ந்து என் டி டி வியும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் ஊக்குவிப்பாளர்கள் அனைவரும் மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்குக்கு எதிராகப் போராட சளைக்க மாட்டோம்” என்று கூறப்பட்டுள்ளது.
Image courtsy: first post.