தமிழகத்தின் அனைத்து ஜவுளி கடைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்ப முடியாமல் சுங்குடி சேலைகள் தேங்கியுள்ளதால், ரூ.15 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் உற்பத்தி செய்யப்படும் சுங்குடி சேலைகள் தனித்தன்மை வாய்ந்தது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் தமிழகம் முழுவதும் உள்ள ஜவுளி கடைகளுக்கும், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஒடிசா, மேற்குவங்கம், புதுதில்லி உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
வழக்கமாக மாதம் ஒன்றுக்கு 8 ஆயிரம் சேலைகள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன. கோடை காலத்தில் சுங்குடி சேலைகளின் தேவை அதிகம் என்பதால், உற்பத்தி 3 மடங்கு வரை அதிகமாக இருக்கும். ஆனால், கோடைக்காக அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்துள்ள சுங்குடி சேலைகள், ஊடரங்கு காரணமாக விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தேங்கியுள்ளன.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த சுங்குடி உற்பத்தியாளர் ஓ.ஜி. சரவணன் கூறியது:
கோடை வியாபாரத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு உற்பத்தி தொடங்கும். அதன்படி, நிகழ் ஆண்டில் உற்பத்தி செய்த சேலைகள் கரோனா தடை உத்தரவு காரணமாக விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளன. மதுரையில் மட்டும் ரூ.15 கோடி மதிப்பிலான சுங்குடி சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், சுங்குடி சேலை உற்பத்தியாளர்களும், மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுங்குடி சேலை உற்பத்தியாளர்களுக்கு முன்பு மின் மானியம் மற்றும் உற்பத்தியின்போது பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களான மெழுகு, மண்ணெண்ணெய் ஆகியன மானியத்தில் வழங்கப்பட்டன. கரோனா தடை உத்தரவு காரணமாக, தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே வழங்கியதைப் போல மானிய உதவிகளை வழங்கினால், சுங்குடி சேலை உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு ஓரளவுக்கு நிவாரணமாக இருக்கும் என்றார்.