Enable Javscript for better performance
உலக நிறுவனங்களில் ஊடுருவியுள்ள 20 லட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உலக நிறுவனங்களில் ஊடுருவியுள்ள 20 லட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்!

    By கி.ராம்குமார்  |   Published On : 15th December 2020 05:01 PM  |   Last Updated : 15th December 2020 06:12 PM  |  அ+அ அ-  |  

    20-lakh-chinese-communist-party-members-in-world-organizations

    உலக நிறுவனங்களில் 20 லட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்

    உலகின் பல முன்னணி நிறுவனங்களில்  ஊடுருவி சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுமார் 20 லட்சம்  பேர் பணியாற்றிக் கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியால் பல்வேறு தரப்பினரும் அதிர்ந்துபோயிருக்கின்றனர்.

    உலக வர்த்தகத்தில் அமெரிக்கா, சீனா இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், வர்த்தக உலகில் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துவதில் இவ்விரு நாடுகளும் கடுமையாகப் போட்டி போட்டு வருகின்றன. 

    இத்தகைய நிலையில் ஷாங்காயில் உள்ள சீன அரசின் சேவையகத்தில் இருந்து கசிந்த தகவல்கள் உலக அரங்கில் முக்கிய கவனம் பெற்றுள்ளன.

    கடந்த 2016-ஆம் ஆண்டு ஷாங்காய் நகரத்தில் உள்ள அரசுத் தரப்பு தரவு சேவையகம் ஒன்றில் இருந்து சீன எதிர்ப்பாளர்களால் களவெடுக்கப்பட்ட இந்த தகவல் திரட்டானது, மற்றொரு சர்வதேச குழுவின் மூலமாகத் தற்போது பன்னாட்டு ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளது.

    சீன கம்யூனிஸ்ட் கட்சியில் 9.2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பலர் வெளிநாடுகளில் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். உலகின் அதிக எண்ணிக்கையிலான கட்சி உறுப்பினர்களைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 லட்சம் உறுப்பினர்கள் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பதவிகளில் பணியாற்றி வருவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இவர்களில் ஆயிரக்கணக்கானோர் பிரிட்டிஷ் அரசின் தூதரகங்கள், பாதுகாப்பு நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னணித் தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவித்துள்ளன. 

    இத்தகையவர்களின், கட்சிப் பொறுப்பு, தேசிய அடையாள அட்டை எண், சார்ந்த இனம், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டுள்ள ஊடகங்கள், பன்னாட்டு அளவிலான உளவு நடவடிக்கையில் சீனா ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

    மேலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் பட்டியலில் ஜாகுவார், ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் எச்எஸ்பிசி உள்ளிட்ட நிறுவனங்களும்  இடம் பெற்றுள்ளன.

    பிரிட்டிஷ் வங்கிகளான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் எச்.எஸ்.பி.சி. ஆகியவற்றின் 19 கிளைகளில் 600-க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களும், மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவில் 123 கட்சி உறுப்பினர்களும், பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறையின் ஒரு பகுதியாக இருக்கும் ஏர்பஸ், போயிங் மற்றும் ரோல்ஸ் ராய்ஸிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

    மேலும் உலகின் பல்வேறு நாடுகளின் தூதரகங்களிலும், 79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களிலும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பணியாற்றி வருவதாகவும் ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் கரோனா தடுப்பூசி குறித்த தரவுகளை சீன அரசு கைப்பற்ற முனைவதாக எழுந்த புகாரின் மத்தியில் தற்போது முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றில் கட்சி உறுப்பினர்கள் பணியாற்றி வருவது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து உலகின் முன்னணி நிறுவனங்களில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் முக்கியப் பதவிகளில் பணியாற்றி வருவது உளவு நடவடிக்கைகளுக்கும், அறிவுசார் சொத்துகளை அணுகுவதற்கும் சீன அரசு மேற்கொண்டு வரும் ராஜதந்திர நடவடிக்கை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

    எனினும், கட்சியின் உறுப்பினர் பட்டியலில் உள்ள எவரும் சீனாவுக்காக உளவு பார்த்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பிரிட்டனின் ஆளும் டோரி கட்சியின் முன்னாள் தலைவரான இயன் டங்கன் ஸ்மித், "சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளனர் என்பதை இந்த விசாரணை நிரூபிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் உலகின் மிக முக்கியமான பன்னாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசின் தூதரகப் பணிகளில் பணியாற்றுகின்றனர்" எனத் தெரிவித்தார்.

    "கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை தற்போது மேற்கொள்ள வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்  அனைவரும் கட்சிக்கும் சீனாவுக்கும் விசுவாசமாக இருப்பதாக உறுதி எடுத்துக்கொண்டவர்கள் என்பதுடன் கட்சியின் உயர் தலைமையின் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

    இத்தகைய சூழ்நிலையில், சீனாவின் நலனுக்குத் தேவைப்பட்டால் எந்தத் தருணத்திலும் எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய, செய்ய வேண்டிய  கடப்பாடு உடையவர்கள் இவ்வாறு உலகின் நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருப்பது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.  எனினும், இதுவரை இத்தகைய புகார்கள் எதுவும் எழவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

    கரோனா தொற்றுப் பரவலுக்கு குற்றம் சாட்டப்பட்ட சீனா தற்போது உலக அளவில் தனது ஊடுருவலை மேற்கொண்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    TAGS
    China

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp