ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் மரவள்ளிக் கிழங்கு பயிரில் செம்பேன் மற்றும் மாவுப்பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், வெண்ணந்தூர், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை,கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளான ஜேடர்பாளையம், தொப்பப்பட்டி, அரி்யாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பேளுக்குறிச்சி, புதுப்பட்டி போன்ற பகுதிகளில் அதிகளவில் மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ரோஸ், குங்குமம், வெள்ளை தாய்லாந்து போன்ற வகை கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. பெரும்பாலும் மானாவாரி பயிராக பயிரிடப்படும் மரவள்ளிக் கிழக்கு பயிரில் ஆண்டுதோறும் மாவுப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதலால் பயிர் பாதிக்கப்படும்.
பின்னர் தோட்டக்கலைத்துறையினர், வைரஸ் வகையை கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளை பரிந்துரைப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் இப்பயிரில் புதியதாக செம்பேன் தாக்குதல் அதிகரித்து காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
10 மாத பயிரான மரவள்ளி இப்பகுதியில் தற்போது சுமார் 6 மாத பயிராக உள்ள நிலையில், இந்த பூச்சி தாக்குதல் அதிகரித்து வருவதால், கிழங்கு உற்பத்தி பெருமளவு பாதிக்கும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதோடு மாவுப்பூச்சி தாக்குதலும் காணப்படுவதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மரவள்ளி பயிரிட்டுள்ள விவசாயிகள் விளைச்சல் குறைந்து பெரிதும் பாதிக்கப்படுவர்.
மருந்துகள் தெளித்தும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தோட்டக்கலைத்துறை, மாவட்ட நிர்வாகம் உரிய விரைந்து நடவடிக்கை எடுத்து பயிரை காப்பாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.