சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொருளாதாரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு நான்கு நாள்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இலங்கைப் பயணம், தமிழகத்தில், அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கட்சி தரப்பில் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு, அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த பயணமானது, அந்நாட்டின் சிலோன் தொழிலாளர்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், நான்கு நாள்கள் பயணமாக நான் இலங்கை புறப்படுகிறேன். அங்குச் சென்று அமைச்சர்கள், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேசவிருக்கிறேன். இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆய்வறிக்கை தயாரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடமும் வழங்குவேன் என்றார்.
முன்னதாக, இலங்கைக்கு பல கோடி நிதியுதவி வழங்கியமைக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு சிலோன் தொழிலாளர் காங்கிரஸ் நன்றி தெரிவித்திருந்தது.
அண்ணாமலையின் இந்த பயணம், தமிழர்கள் மீது பாஜக கொண்டிருக்கும் அக்கறையை மாநில அளவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கொண்டுசெல்வதாக அமைந்துள்ளது.
அதுபோல, தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவுக்கு, மாநில அளவிலான அரசியலில் இது மிகப்பெரிய திருப்பு முனையாகவும், பாஜகவை தமிழக மக்கள் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையிலும் இது அமையும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் காலூன்ற பாஜக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அக்கட்சியின் மாநில தலைவரின் இலங்கைப் பயணம் நிச்சயம் அந்த முயற்சியின் ஒரு அங்கமாகவே இருக்கலாம் இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.