சென்னை: பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களில் பலரும் கணினி அறிவியல் பாடத்தை அதிகம் விரும்புவதால், பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் 50% அதிகரிக்கப்பட்டுள்ளது.
கணினி அறிவியல் பாடத்தில் அதிக இடங்கள் இருப்பதால் மாணவர்கள் கண்ணை மூடிக் கொண்டு அதில் சேர்ந்துவிடாமல், நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இதையும் படிக்க | அம்பானி வீடு இல்லை.. ஆர்டிஓ வீடு; மலைத்துப் போன அதிகாரிகள் (விடியோ)
2021ஆம் ஆண்டு கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பாடங்களல் 27,006 சேர்க்கை இடங்கள் இருந்தன. ஆனால் இந்த ஆண்டு இது 42 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோலவே கடந்த ஆண்டு பிடெக் தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் 9,114 ஆக இருந்த மாணவர் சேர்க்கை இடங்கள் இந்த ஆண்டு 15,718 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிடெக் ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பாடத்தில் இதுவரை 2,732 இடங்கள்தான் இருந்தன. ஆனால் இந்த ஆண்டில் இந்த பாடத்தில் பல்வேறு மாற்றங்களுடன் பல கல்லூரிகள் புதிய பாடங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, இந்த பாடப்பிரிவில் 14,000 சேர்க்கை இடங்கள் உள்ளன.
பல பொறியியல் கல்லூரிகள் சிவில், மெக்கானிக்கல் என்ஜினியரிங் போன்ற பாடங்களில் மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைத்துவிட்டு கணினி அறிவியலில் கூடுதல் சேர்க்கை இடங்களைக் கொண்டு வந்துள்ளன.
எனவே, இந்த சூழ்நிலையில், கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தற்போது எந்தப் படிப்புக்கு அதிகத் தேவை இருக்கிறது என்பதை கணித்து, கல்லூரிகளையும் பார்த்து சேர்க்கை பெறவேண்டும்.
தற்போது தகவல் தொழில்நுட்பத் துறை நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, கணினி அறிவியல் படித்தால் நல்ல பணி வாயப்பு உள்ளது. ஆனால், இந்த நிலையே நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்குமா என்பது நிச்சயமில்லாதது.
கணினி அறிவியல் கிடைத்தால் எந்தக் கல்லூரியிலும் சேர்க்கை பெற மாணவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அது தவறு. நல்ல கல்லூரியைத் தேர்வு செய்து அதிலிருக்கும் நல்ல பாடப்பிரிவை தேர்வு செய்வதுதான் மிகச் சிறந்தது என்கிறார்கள் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்கள்.