க்யூஆர் கோடு என்பது, குயிக் ரெஸ்பான்ஸ் என்பதன் சுருக்கமே. இந்த க்யூஆர் கோடுகள், மிகத் துல்லியமாக செயல்படுகின்றன. அதனை நமது ஸ்மார்ட்போன்களில் ஸ்கேன் செய்ததும் அதன் யூஆர்எல்-ஐ ஒரு வினாடியில் படித்துக்காட்டிவிடுகிறது.
அந்த யூஆர்எல் மூலம், ஒரு இணையதளத்துக்கோ அல்லது செயலிக்கோ அல்லது ஒரு வங்கிக் கணக்கு எண்ணுக்கோ நேரடியாக சென்றுவிடலாம். க்யூஆர் கோடு மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது, நேரடியாக வங்கிக் கணக்கைப் போட்டு பணப்பரிமாற்றம் செய்யும் போது நேரிடும் தவறுகள் தவிர்க்கப்படலாம்.
இதையும் படிக்க.. 2023-ஆம் ஆண்டோடு வாழ்க்கைப் பந்தயத்துக்கு விடைகொடுங்கள்!
ஆனால், இவ்வளவுக் கச்சிதமாக செயல்படும் க்யூஆர் கோடுகளைப் பயன்படுத்தி மோசடி செய்யலாம் என்று சிந்திக்காமல் இருந்திருப்பார்களா மோசடியாளர்கள்? எனவே, இனி க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்யும்போதும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மையில், இளைஞர் ஒருவர் க்யூஆர் கோடு மோசடி மூலம் ரூ.50 ஆயிரத்தை இழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பழைய வீட்டு உபயோகப்பொருள் ஒன்றை விற்பனை செய்ய விளம்பரம் செய்திருந்த அந்த நபரிடம், மோசடியாளர் பேசி, பொருளை தான் வாங்கிக் கொள்வதாகவும், ஒரு க்யூஆர் கோடை தாம் அனுப்புவதாகவும், அதனை இளைஞர் ஸ்கேன் செய்தால், உடனடியாக அவரது வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும் என்று கூறி க்யூஆர் கோடை அனுப்பியிருக்கிறார். அந்த க்யூஆர் கோடை இளைஞர் ஸ்கேன் செய்ததும் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஒரு மாதமாகியும் ராஜஸ்தானில் அமைச்சரவை பதவியேற்காததன் காரணம்?
எனவே, முன்பின் தெரியாத, இதுபோன்ற மோசடியாளர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இணையதளம் மூலமாகவோ, வெளி நபர்களிடமிருந்து வரும் லிங்க்குகளில் இருக்கும் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய வேண்டாம்.
இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க, ஸ்மார்ட்போன்களிலேயே இணைக்கப்பட்டிருக்கும் ஸ்கேனர்களைப் பயன்படுத்தினால் அவை பாதுகாப்பை உறுதி செய்துகொண்ட பிறகே ஸ்கேன் செய்யும் வகையில் இருக்கும். எனவே, இது மோசடிகளைத் தவிர்க்க உதவும்.
பணப் பரிமாற்றத்துக்கு எப்போதும் இரண்டு பாதுகாப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துங்கள். இது ஓரளவுக்கு உதவலாம்.
செல்போனின் சாஃப்ட்வேர் அப்டேட்களை அவ்வப்போது அப்டேட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இது அடுத்தக்கட்ட பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்.