சென்னையிலிருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் அருகே பல கி.மீ. நீளத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. இதனால் இந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகக் குலைந்துள்ளது.
முன்னதாக, காவேரிப்பாக்கம் அருகே ராட்சத காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு முதல் சுமார் 13 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து காற்றாலை உதிரிபாகமான ராட்சத இறக்கை ஏற்றிக்கொண்டு பெங்களுரூ நோக்கி லாரி ஒன்று ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே வியாழக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் 6 வழிச்சாலை விரிவாக்கத்திற்காக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. அந்த பாதை வழியாக லாரி சென்றபோது அருகே இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்துக்குள்ளான பகுதி ஒருவழிப்பாதை என்பதால், வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்டவரிசையில் நின்றது. இதனால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு 8 மணி முதல் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
ஓச்சேரிக்கும் காவேரிப்பாக்கம் பாலத்துக்கும் இடையே சுமார் 8 கி.மீ. தொலைவைக் கடக்க சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலானது.
போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக வாகன ஓட்டிகளும், பேருந்துப் பயணிகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.