குமாரபாளையம் அருகே காகித கோன் உற்பத்தி செய்யப்படும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.
குமாரபாளையத்தை அடுத்த சடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (45). இவர், அதே பகுதியில் நூல்களை சுற்றி வைக்கப் பயன்படுத்தப்படும் காகித கோன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை எதிர்பாராமல் தீப்பிடித்துள்ளது.
காற்று வீசியதாலும், காகித அட்டை என்பதாலும் தீ மளமளவெனப் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதியினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த குமாரபாளையம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர்.
இவ்விபத்தில், ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.