முதல்வர் பொது நிவாரண நிதிக்குத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் பரவும் கரோனா நோய்த் தொற்றைச் சமாளிக்கப் பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்துவரும் நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்காக ரூ. 25,73,790 வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் திருச்சி கிளையின் பங்களிப்பாக ரூ. 2 லட்சத்து நூறு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகைக்கான காசோலையைத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் மகேசுவரனிடம் சங்கத்தின் பொதுச்செயலர் ந. இராசகுமார், சங்கப் பொருளாளர் எஸ். ஜோதிவீரபாண்டியன், சென்னை கிளைச் செயலர் சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.
இந்த சந்திப்பின்போது, ஓய்வூதியர்களுக்குக் கிடைக்க வேண்டிய, நிலுவையிலுள்ள சுமார் ரூ. 250 கோடி ஓய்வூதியப் பணப் பயன்களை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக ஆவன செய்வதாக வாரிய மேலாண் இயக்குநர் மகேசுவரனும் நிதி இயக்குநர் நிதி இயக்குநர் சீனிவாசராகவனும் தெரிவித்தனர் எனச் செய்திக்குறிப்பொன்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத் திருச்சி கிளை இணைச் செயலர் அ. நடராசன் தெரிவித்துள்ளார்.