என் மரணத்தை அறிவிக்க டாக்டர்கள் தயாராக இருந்தனர்: போரிஸ் ஜான்சன்

தன்னுடைய மரணத்தை அறிவிக்க டாக்டர்கள் தயாராக இருந்ததாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
என் மரணத்தை அறிவிக்க டாக்டர்கள்  தயாராக  இருந்தனர்: போரிஸ் ஜான்சன்
Updated on
1 min read


தன்னுடைய மரணத்தை அறிவிக்க டாக்டர்கள் தயாராக இருந்ததாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனிலிருந்து வெளிவரும் தி சன் இதழுக்கு அளித்த பேட்டியொன்றில், தம்மை உயிரைக் காப்பாற்றி வைத்திருப்பதற்காக லிட்டர் லிட்டராக ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ஜான்சன்.

"அது மிகவும் மோசமான தருணம், என்னால் மறுக்கவே முடியாது. என் விஷயத்தைக் கையாள்வதில் அவர்கள் (டாக்டர்கள்) ஓர் உத்தியைக் கடைப்பிடித்தார்கள்.

"நான் அவ்வளவு நல்ல நிலைமையில் இல்லை, எனக்கு நன்றாகத் தெரியும், எதிர்காலத் திட்டமொன்றையும் அவர்கள் வைத்திருந்தார்கள்.

"நிலைமை மிகவும் மோசமாகப் போனால் என்ன செய்வது என்பதற்கான எல்லாவித ஏற்பாடுகளையும் டாக்டர்கள் செய்துவைத்திருந்தனர்.

"எனக்கு ஆக்ஸிஜன் செலுத்துவதற்காக அவர்கள் முகக் கவசம் தந்தார்கள். மிக மோசமான எதார்த்த நிலை திடீரென வந்துவிட்டது, நிறைய வயர்கள் இணைப்புடன் கூடிய கண்காணிப்பு சாதனங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டேன்.

"அந்தக் குறியீடுகள் எல்லாம் தவறான திசையில்தான் சென்றுகொண்டிருந்தன. கரோனாவுக்கு சிகிச்சையே இல்லை என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார் போரிஸ்.

லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தன்னுடைய வாழ்வா, சாவா போராட்டத்தின்போது, 'எவ்வாறு  இதிலிருந்து வெளியே வரப் போகிறேன்? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்' என்றார் அவர்.

"ஒருசில நாள்களிலேயே என்னுடைய உடல்நிலை இந்தளவுக்கு சீர்குலைந்துவிடும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. வெறுத்துப் போய்விட்டதை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஏன் குணமடையவில்லை என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

"பிழைக்கலாம் அல்லது இறக்கலாம் என்ற நிலையில் ஆக்ஸிஜன் அளிப்பதை நிறுத்திவிடலாமா என்று யோசிக்கக்கூடிய அந்த மோசமான தருணமும் வந்தது. அப்போதுதான் நிலைமையை  எவ்வாறு சிக்கலின்றி சமாளிப்பது (மரணத்தை அறிவிப்பது) பற்றி அவர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டார்கள்"  என்று தெரிவித்தார் போரிஸ் ஜான்சன்.

அசாதாரணமான இரண்டு வார காலத்தைக் கடந்து, ஏறத்தாழ செத்துப் பிழைத்த நிலையில், அலுவலகம் திரும்பியுள்ள போரிஸ் ஜான்சன், இன்னொரு பிறப்பை - தோழி கேரி சைமன்ட்ஸுக்குப் புதிதாகப் பிறந்த மகன் வில்பிரட் - கண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் தன்னை மருத்துவப் பணியாளர்கள் கவனித்துக் கொண்ட விதத்தை, மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நன்றியுணர்வுடன் நினைவுகூர்ந்துள்ளார் போரிஸ்.

மருத்துவமனையிலிருந்து தந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 17-வது நாளில் மகன் பிறந்திருக்கிறான்.  மருத்துவமனையில் தன்னைக் கவனித்துக் கொண்ட டாக்டர்கள் நிக்கொலஸ் பிரைஸ், நிக்கொலஸ் ஹார்ட் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  குழந்தைக்கு நடுப் பெயராக நிக்கொலஸ் என்று சூட்டியுள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com