புது தில்லி: ரயில் இருப்புப் பாதைகளிலும், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளிலும் சாரை சாரையாக நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதை அவர்களது சொந்த ஊரை நோக்கியதாக உள்ளது.
இதுவரை 167 ரயில்களில் 2.39 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஆனால், சாலை வழியாகவோ அல்லது இருப்புப் பாதையிலோ சென்று கொண்டிருக்கும் மற்றும் சொந்த ஊருக்கு சென்று சேர்ந்த அல்லது ஒரேயடியாக சென்று சேர்ந்துவிட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் புள்ளி விவரங்களை இதுவரை யாரும் வெளியிடவில்லை.
ஊரடங்கு தொடங்கியது முதலே புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றிய எத்தனையோ புகைப்படங்கள் நாள்தோறும் சமூக ஊடகங்களில் வலம் வந்து, காண்போர் அனைவருக்கும் உயிர்வாதையைத் தந்துகொண்டிருக்கிறது.
புலம்பெயர் தொழிலாளர்களின் ஒலிக்காத குரல்களுக்கு மாற்றாகவே இந்த புகைப்படங்கள் நம் ஒவ்வொருவரின் உள்ளக் குமுறலையும் ஒரு உலுக்கு உலுக்குகிறது. பொது முடக்கத்தையொட்டி, நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் லட்சக்கணக்கான வட இந்திய மக்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு சோகப் பின்னணி இருக்கத்தான் செய்கிறது.
உயிரிழந்தாலும் பரவாயில்லை, ஊருக்குப் போய்விடுவோம் என்று சாலைகள்தோறும், ரயில்பாதைகள்தோறும் புலம்பெயர் மக்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
இப்படி நடந்து சென்ற அசதியில் தண்டவாளத்தில் படுத்து உயிரிழந்த 16 தொழிலாளர்களும், புலம் பெயர் தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த டிரக் விபத்துக்குள்ளாக மரணம் அடைந்த 24 தொழிலாளர்களும் சொந்த ஊரை நோக்கித்தான் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். ஆனால்.. அது அவர்கள் நினைத்தபடி அமையவில்லை.
வேலையில்லை, கையில் காசுமில்லை.. சொந்த ஊரை நோக்கி நடக்கிறோம். எங்கள் எதிர்காலம் என்ன என்பதற்கு பதிலும் இல்லை என்று கூறும் புலம்பெயர் தொழிலாளியான ஒரு இளைஞர், ஒன்று மட்டும் நிச்சயம்.. "ஒரு வேளை நான் மரணம் அடைந்தால், நான் என் வீட்டில் மரணம் அடைவேன். மீண்டும் எக்காரணத்தைக் கொண்டும் எந்த சொந்த மண்ணைவிட்டு வர மாட்டேன்" என்கிறார்.
இவர்களது எதிர்காலத்தோடு, இவர்களால் கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருந்த பல தொழில் நிறுவனங்களின் எதிர்காலமும், தொழிலாளர்களின் பற்றாக்குறையால் கேள்விக்குறியாகியிருப்பதும் கண்கூடாகவே தெரிகிறது.