எகிப்தில் மருத்துவமனையொன்றில் கரோனா நோயாளியும் பெண் டாக்டரும் காதலித்ததாகவும் மண உறுதியும் செய்துகொண்டுவிட்டனர் என்றும் இருவரும் மருத்துவ உடையில் இருப்பதைப் போன்ற படங்களுடன் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இந்தச் செய்தி தவறானது என்பதுதான் ஹைலைட்.
ஒரு படத்தில் அந்தப் பெண்ணுக்கு மோதிரம் அணிவிக்கிறார் அந்த ஆண். மற்றொன்றில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். காரோனா காலத்தில் காதலித்த இருவரும் மணமும் செய்துகொள்ளப் போகின்றனர் என்று குறிப்பிட்டுப் பரவிவருகிறது செய்தி.
ஆனால், விசாரித்ததில் இந்தச் செய்தி தவறானது எனத் தெரியவந்துள்ளது. இந்தப் படங்கள் யாவும் திருமணத்துக்கு முந்தைய படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவை என்றும் தெரியவந்திருக்கிறது.
2018 முதலே இவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரையிலும் அவருக்கு கரோனா நோய் தொற்றவும் இல்லை.
இந்தப் படங்களுக்கான "நதிமூலத்தைத்" தேடியபோது இவர்களுடைய படங்களுடன் அரபியில் செய்தி வெளியாகியிருப்பது தெரியவந்தது.
படத்திலுள்ள இருவருமே எகிப்தைச் சேர்ந்த டாக்டர்கள்தான் - முகமது பாமி மற்றும் ஆயா மோஸ்பா. கரோனா காலத்தில் எகிப்திலுள்ள மன்சூரா நகரிலுள்ள தர் அல் ஷிபா மருத்துவமனையில் மண உறுதி செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தியில் எங்கேயும் யாருக்கும் கரோனா தொற்றியதாக எதுவுமில்லை.
இந்தப் புகைப்படங்களை எடுத்த மன்சூராவைச் சேர்ந்த புகைப்படக்காரர் முகமது செலிம் என்பவர், இந்தப் படங்களை முகநூலில் வெளியிட்டு, டாக்டர் மணமக்களையும் "டேக்" செய்திருக்கிறார்.
இந்த மோசமான காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக மருத்துவமனையில் இந்தப் புகைப்படப் பிடிப்பை வைத்துக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார் செலிம்.
டாக்டர்களான இவர்கள் இருவருக்குமே கரோனா தொற்று எதுவுமில்லை என்றும் இந்தப் படங்களை எடுத்தவரான செலிம் குறிப்பிட்டுள்ளார்.
யப்பா, இந்த சமூக ஊடகங்கள் படுத்துகிற பாடு, தாங்க முடியலை சாமி!