
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பயணிகள் தங்கும் விடுதியை பயன்பாட்டிற்குத் திறந்துவிட பக்தர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சுழியில் உள்ள பகவான் ரமண மகரிஷி பிறந்த இல்லத்தையும், மேலும் அங்குள்ள ஸ்ரீரமணர் ஆசிரமத்தையும் காண்பதற்குத் தமிழகம், இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகள், வரலாற்று அறிஞர்கள் பலரும் நேரில் வந்து செல்கின்றனர்.
இத்தகு புகழ்மிக்க திருச்சுழியில் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்திட்டப்படி 2011-12 ஆம் நிதியாண்டில் பல லட்சம் ரூபாய் செலவில், பல அறைகள் கொண்ட பயணிகள் தங்கும் விடுதி கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் இங்கு மின் இணைப்பு வழங்கப்படாததாலும், மின்மோட்டாருடன் கூடிய தண்ணீர்த்தொட்டி வசதி ஆகியன இல்லாததாலும் தற்போதுவரை அக்கட்டடம் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்படாமலே உள்ளது.
திருச்சுழி முதல்நிலை ஊராட்சி மூலம் கட்டப்பட்ட இக்கட்டடத்தைத் திறந்துவிடக்கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் கூட தற்போதுவரை நடவடிக்கை இல்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி இந்த கட்டத்திற்குத் தேவையான உரிய வசதிகளைச் செய்து, விரைவில் கட்டடத்தைப் பயன்பாட்டிற்குத் திறந்துவிடவேண்டும் என மீண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.