வேதாரண்யம்: இலங்கையில் இருந்து தப்பி வந்தவர் அங்கு நிதி நிறுவனம் நடத்தி இந்திய மதிப்புக்கு ரூ.450 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியா என்பது குறித்து உளவுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரைக்கு இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக சனிக்கிழமை வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரில் இருவர் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், சிறுவர் ஒருவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கோடியக்கரை சவுக்கு தோப்பு கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்ற பெண் உள்ளிட்ட மூவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் இவர்கள் இலங்கை கொழும்பு, ஹிந்தி ஹஸ்யாயா ரோடு ஏ.முகமது ஷிகாப் (45) இவரது மனைவி பாத்திமா ஃபர்ஸானா மர்க்கர் (39) இவர்களது மகன் அப்துல்லா வாசிம் ஷிகாப் (10) என உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரு மீன்பிடி படகில் சட்ட விரோதமாக பயணித்து வந்த இவர்களை கோடியக்கரை கடற்கரையில் இறக்கி விட்டதும், பிறகு அந்த படகு திரும்பி சென்றதும் தெரிய வந்தது.
இவர்கள் மீது வேதாரண்யம் காவல் நிலையத்தில் இந்திய கடவு சீட்டு விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வேதாரண்யம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மூவரில், முகமது ஷிகாப் (45) இவரது மனைவி பாத்திமா ஃபர்ஸானா மர்க்கர் இருவரையும் புழல் சிறையில் அடைக்கவும், சிறுவனை நாகையில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து தப்பி வந்த முகமது ஷிகாப் அங்கு நிதி நிறுவம் நடத்தி இந்திய மதிப்புக்கு ரூ.450 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியா என்பது குறித்து உளவுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.