கந்த சஷ்டி நிறைவு விழாவை முன்னிட்டு கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருக்கல்யாணம் மிக விமர்சையாக நடைபெற்றது.
கந்தசஷ்டி விழாவின் நிறைவு நிகழ்வான திருக்கல்யான உற்சவ நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெற்றது.
இந்நிலையில், ஏழாம் படை வீடான கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த 15 ஆம் தேதி கந்த சஷ்டி விழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கி நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது.
மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணம் நிகழ்ச்சி
அதைத்தொடர்ந்து சனிக்கிழமை முருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 8 மணி அளவில் வள்ளி தெய்வானையுடன் அருள் சுப்ரமணியசாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் வள்ளி-தெய்வானைக்கு பச்சைப்பட்டாடை உடுத்தி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முன்னதாக யாகம் வளர்க்கபட்டு ஓதுவார் மூர்த்திகளால் வேதங்கள் ஓதப்பட்டது. இதனைத் தொடர்ந்து கன்னிகா தானம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் யாருக்கும் கோவிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் மருதமலை கோவியில் பக்தர்கள் இன்றி திருக்கல்யாணம் நடைபெற்றதால் களை இழந்து காணப்பட்டது.