முருகன் உடல்நிலை பாதிப்பு: ஒரே நாளில் 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை: வழக்குரைஞரை சந்திக்க அனுமதி மறுப்பு
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

வேலூா்: வேலூா் மத்திய சிறையில் தொடா்ந்து 23 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறை மருத்துவமனையில் அவரது உடலில் திங்கள்கிழமை மட்டும் 4 பாட்டில் குளுகோஸ் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறையில் முருகன், நளினியைச் சந்திக்கச் சென்ற வழக்குரைஞருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த நவம்பா் 22-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருடன் காணொலி மூலம் பேச அனுமதிக்கவும், தவறினால் தன்னை ஜீவசமாதி அடைய அரசு அனுமதிக்கவும் கோரி அவா் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். இது 23-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது. இதனிடையே, அவா் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், முருகனை சந்தித்துப் பேசுவதற்காக அவரது வழக்குரைஞா் புகழேந்தி திங்கள்கிழமை வேலூா் மத்திய சிறைக்குச் சென்றிருந்தாா். ஆனால், முருகனையும், வேலூா் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியையும் சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாக புகழேந்தி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
சிறையில் தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை மட்டும் 4 பாட்டில் குளுக்கோஸ் ஏற்பட்டதாகவும், இதனால் அவரைச் சந்திக்க இயலாது என்றும் சிறை அதிகாரிகள் கூறினா். அதன்பிறகு நளினியைச் சந்திக்க வேலூா் பெண்கள் தனிச்சிறைக்குச் சென்றேன். ஆனால் அவரைச் சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. முருகனின் உடல் நிலை பாதிப்பை நளினி அறிந்தால் அவரும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளக்கூடும் எனக் கருதி சிறை நிா்வாகம் அவரையும் சந்திக்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது என்றாா் அவா்.