பருத்திக்கு உரிய விலை கொடுக்காததால் விவசாயிகள் சாலை மறியல்

சீர்காழி அருகே வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்திக்கு உரிய விலை கொடுக்காததால் விவசாயிகள் இன்று (செவ்வாய்கிழமை) மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், குறைந்த விலையில் பருத்தி கொள்முதல் செய்வதைக் கண்டித்து விவசாயிகள் எருக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், குறைந்த விலையில் பருத்தி கொள்முதல் செய்வதைக் கண்டித்து விவசாயிகள் எருக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீர்காழி:  சீர்காழி அருகே வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் பருத்திக்கு உரிய விலை கொடுக்காததால் விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே, எருக்கூரில் நாகப்பட்டினம் வேளாண்மை விற்பனைத் துறை விற்பனைக் குழு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. இங்கு நாகை, கடலூர், பண்ரூட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் உற்பத்திச் செய்த பருத்தியை வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் கொண்டு வந்து பருத்தி ஏலம் விடப்படுகிறது. இங்கு திங்கள்கிழமை விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகள் வியாபாரிகள் வராததால் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டு இன்று (செவ்வாய்கிழமை) ஏலம் விடப்பட்டது. 

விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி மூட்டைகளில், 50 சதவிகிதத்துக்கு மேல் தரமான பருத்தியாக தேர்வு செய்யப்பட்டு ஒரு குவிண்டால் ரூ. 5,550க்கு அரசு விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது. மீதமுள்ள பருத்தி, வியாபாரிகளால் ஒரு குவிண்டால் ரூ. 3,800 வீதம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதாக அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டு அதற்குரிய பட்டியல் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி தரமாக இருந்தும் குவிண்டால் ரூ. 3,800 வீதம் கொள்முதல் செய்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எருக்கூரில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பருத்தி மூட்டைகளை சாலையின் குறுக்கே போட்டு இன்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த கொள்ளிடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பருத்தி கொள்முதல் செய்வதில் விவசாயிகளிடத்தில் எந்த பாரபட்சமும் இன்றி பருத்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com