நினைவு நாள்: அன்னியச் செலாவணியையும் தங்க இருப்பையும் மீட்ட ஆர்.கே. சண்முகம் செட்டியார்

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் நினைவு நாள் இன்று.
நினைவு நாள்: அன்னியச் செலாவணியையும் தங்க இருப்பையும் மீட்ட ஆர்.கே. சண்முகம் செட்டியார்

சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் நினைவு நாள் இன்று. இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராக போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார், ஒரு சிறந்த பேச்சாளரும்  வழக்கறிஞரும்கூட. ஆற்றல்மிக்க சிந்தனையாளர். அதுமட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவரும் ஆவார். தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கிய ஆர். கே. சண்முகம் செட்டியார், தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த பெருமையும் அவருக்குண்டு. காங்கிரஸ் கட்சியைச் சேராதவர் என்றாலும் காந்தியின் பரிந்துரையால் முதல் நிதியமைச்சராக நேருவால் நியமிக்கப்பட்ட ஒரே தமிழர் என்ற சிறப்புகளையெல்லாம் கொண்டவர் ஆர்.கே. சண்முகம் செட்டியார்.

சண்முகம் செட்டியார், 1892 இல் ஆர். கந்தசாமி செட்டியாருக்கும், ஸ்ரீரங்கம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள்  ஒரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும். கோயமுத்தூரில் இவருக்கு சொந்தமாக தொழிற்சாலைகள் இருந்தன. கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடர்ந்த இவர் பிறகு, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். திருவிதாங்கூர், கொச்சி சமஸ்தானங்களின் திவானாக இருந்தார்.

நீதிக் கட்சியில் இருந்த சண்முகம் செட்டியார், 1920-ல் சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினரானார். பிறகு, சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தார். 1924-ல் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்டு மத்திய சட்டசபை என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரானார். மத்திய சட்டசபையின் துணைத் தலைவர், தலைவர் ஆகிய இரு பதவிகளையும் இவர் வகித்திருக்கிறார். முதல் நிதியமைச்சராக 1947-க்கு பிறகு சுதந்திர இந்தியாவில் பதவியேற்று, அந்தக் காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பல திட்டங்களைக்  கொண்டுவந்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த பெரும் பங்காற்றினார். அவருடைய நிதித் துறை நிர்வாகத்தை காங்கிரஸ் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். காந்தி, தாகூர், அன்னிபெசன்ட், சித்தரஞ்சன் தாஸ், அவ்வை டி.கே. சண்முகம் என்று பலதுறைகளைச் சேர்ந்தவர்களுடனும் சண்முகம் செட்டியார் நட்பு கொண்டிருந்தார்.

1952 ஆம் ஆண்டு, சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவர்.

தில்லித் தமிழ்ச் சங்கம், லண்டன் தமிழ்ச் சங்கம் போன்றவற்றைத் தோற்றுவித்தவர்களில் அவரும் ஒருவர். சிதம்பரம் ராஜா சர் அண்ணாமலைச்  செட்டியார் தமிழிசை இயக்கம் ஒன்றை ஆரம்பித்து தமிழில் பாடல்களைப்  பாடுவதற்காக ராஜா அண்ணாமலை மன்றத்தைச் சென்னையில் உருவாக்கியபோது அவருடன் இருந்தார் ஆர்கேஎஸ். கோவையில் பஞ்சாலைகள் உருவாகவும் கோவை மாபெரும் தொழில் நகரமாகவும் அவருடைய பங்களிப்புகள் ஏராளம்.

இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராகவும், சிறந்த பேச்சாளராகவும், தமிழ் இலக்கிய எழுத்தாளராகவும் போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார், மே மாதம் 5 ஆம் நாள் 1953 ஆம் ஆண்டு, தனது 61-வது வயதில் காலமானார்.

 தன்னுடைய பொதுவாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் புரிந்த இவர் உலகளாவிய பெருமைப் பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம்.  ‘தென்னாட்டுத் தாகூர்’ என்றும், ‘திராவிட மணி’ என்றும் அறிஞர் அண்ணாவால்  மகுடம் சூட்டப்பட்டார் ஆர்.கே.சண்முகம் செட்டியார். தமிழர்களால் என்றென்றைக்கும் பெருமைப்படத்தக்கவராக விளங்குகிறார் அவர். இளம் வயதிலேயே, பல மொழிகளைக் கற்றறிந்தார். சட்டம் பயின்றவர், கோவை நகர்மன்றத் துணைத் தலைவர், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றினார். பாராட்டிப் 
பயன்பெற்றவர்கள் இவரைப் பிற்காலத்தில் புறக்கணித்தனர். அன்றும்  தகுதி தடையாக இருந்தது.

அன்னிபெசன்ட் அம்மையாருடன் இங்கிலாந்து சென்று பல பொதுக்கூட்டங்களில் இந்திய சுதந்திரம் குறித்து உரையாற்றினார். 1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். உலக நாணய மாநாட்டில் பங்கேற்றார். 1945இல் மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராக பணியாற்றினார். இந்தியாவில் உள்ள மிகப் பெரிய வீட்டு நூலகங்களில் இவருடையதும் ஒன்று. இங்கிலாந்திடம் சிக்கியிருந்த, பல கோடி ரூபாய் அன்னியச் செலாவணியையும் தங்க இருப்பையும் சுதந்திரத்திற்குப்  பின் தன் வாதத் திறமையால் மீட்டெடுத்தார்.

இத்தனை பெருமை மிக்க ஆர்.கே. சண்முகம் செட்டியாரை இன்று, அவருடைய நினைவு நாளில், யாரேனும் நினைத்துப் பார்த்தார்களா, இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com