கூத்தாநல்லூர் நகராட்சியின் 685 கடைகளில் ஆணையர் லதா ஆய்வு
By DIN | Published On : 18th May 2020 05:02 PM | Last Updated : 18th May 2020 05:02 PM | அ+அ அ- |

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 685 கடைகளில், ஆணையர் லதா ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளன. கடை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து, அரசு விதித்த விதிமுறைகள் சரியான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் உத்தரவுப்படி, கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா, சுகாதார ஆய்வாளர் அருண்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இன்று (திங்கள்கிழமை) ஆய்வில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆணையர் லதா கூறியதாவது:
கரோனா நோய்த் தொற்று மேலும் பரவாமல் இருக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்கள் முதல் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறோம். மேலும், கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும், நகராட்சி வாகனம் மூலம், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ப்ளீச்சிங் பவுடரும் தூவப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கைகளை கழுவுவதற்காக, நகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் சானிடைசருடன், தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளன.
நகராட்சியில் இயங்கும் 685 கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, கடைத்தெரு, மேலக்கடைத்தெரு, மரக்கடை, கொரடாச்சேரி சாலை, மருத்துவமனை சாலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இயங்கக்கூடிய கடைகளில், அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைப்பிடிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
கடைகளில் சமூக இடைவெளிக்கான இடைவெளியுடன் மக்கள் நிற்கிறார்களா, அதற்குரிய வட்டங்கள் போடப்பட்டுள்ளனவா, கடை உரிமையாளர்களும், பணியாளர்களும் முகக் கவசங்கள் அணிந்து, கையுறை போட்டுள்ளார்களா, வாடிக்கையாளர்கள் கைகளை கழுவுவதற்காக தண்ணீர், சோப்பு வைத்துள்ளார்களா, வருகைப் பதிவேடு வைக்கப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், வெளியில் வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலனுக்காக, நகராட்சி சார்பில், 3 வாகனங்களில் குறைந்த விலையில் ரூ.100 க்கு காய்கறிகள் வீடு தேடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.