மும்பையில் கணவர் இறந்த சில மணி நேரத்தில் தெற்குக் கர்நாடகத்தில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார் அவருடைய மனைவி.
மகாராஷ்டிரத்தில் புணே நகரில் ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தவர் சஞ்சித். இவருடைய மனைவி லாவண்யா.
லாவண்யா எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது மகப்பேறுக்காக, கணவரைப் பிரிந்து கர்நாடகத்திலுள்ள தன் சொந்த ஊரான வேனூருக்கு வந்துவிட்டார்.
சில நாள்களுக்கு முன் திடீரென சஞ்சித்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. கரோனா பொது முடக்கம் காரணமாக உடனடியாக, கரோனா சிகிச்சை மருத்துவமனை அல்லாத எந்த மருத்துவமனைக்கும் செல்ல முடியவில்லை.
வேறு வழியின்றிக் கடைசியாக கரோனா மருத்துவமனைக்குச் சென்ற சஞ்சித், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஒருவரை நம்பிதான் இந்தக் குடும்பமே இருக்கிறது.
கணவர் இறந்த சில மணி நேரங்களில் ஊருக்கு வந்திருந்த லாவண்யா, குழந்தை பெற்றெடுத்தார். கணவர் இறந்த தகவல் அவருக்குச் சொல்லப்படவில்லை.
சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்தவரான லாவண்யா, இப்போது, கணவரில்லாமல் தன் இரு குழந்தைகளே வளர்க்க வேண்டியவராகிவிட்டார்.
கடைசியாகத் தாயிடம் தொலைபேசியில் பேசும்போது கரோனா பிரச்சினையால் உடனடியாக மருத்துவமனைக்குத் தன்னால் செல்ல முடியவில்லை என்று சஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, லாவண்யாவின் சகோதரரால் சொந்த ஊருக்கு வந்துசேர முடியவில்லை. கரோனா கட்டுப்பாடு காரணமாக இரு மாநில எல்லையிலேயே அவர் தடுத்துத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார்.