விழுப்புரம், சென்னை தேசிய நெடுஞ்சாலை முத்தம் பாளையம் புறவழிச்சாலை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
விழுப்புரத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலை முத்தம் பாளையம் புறவழிச்சாலை தொடக்கம் முதல், விழுப்புரம் நகரம் நான்கு முனை சாலை சந்திப்பு வரை ஏராளமான சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இது தொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் லெனின் தலைமையிலான நெடுஞ்சாலை துறையினர் சனிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
முத்தம்பாளையம் புறவழிச்சாலையில் தொடங்கி சாலையின் இருபுறங்களிலும் சாலையோரம் உள்ள கடைகள், தற்காலிக கூடாரங்கள் ஆகியவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் நகர காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணி தொடர்ந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு விழுப்புரம் நான்குமுனை சாலை சந்திப்பு வரை தொடரும் என தெரிவித்தனர்.