

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் வாழைத்தாா்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பொத்தனூா், பாண்டமங்கலம், குச்சிப்பாளையம், வெங்கரை, நன்செய் இடையறு, அனிச்சம்பாளையம், குப்புச்சிபாளையம்,பொய்யேரி, ஓலப்பாளையம், செங்கப்பள்ளி, எல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை நடவு செய்யப்பட்டுள்ளன.
வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்துள்ள வாழைத்தாா்கள்.
இப் பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தாா்கள் பரமத்திவேலூரில் உள்ள வாழைத்தாா் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தாா்களை தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் வியாபாரிகள் கொண்டு செல்கின்றனா்.
இந்த நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற வாழைத்தார் ஏலத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில், அதிகபட்சமாக பூவன் வாழைத்தார் ரூ.450, ரஸ்தாளி ரூ.250, கற்பூரவள்ளி ரூ.300, பச்சைநாடன் ரூ.250, மொத்தன் காய் ஒன்று ரூ.3 வரையிலும் ஏலம் போனது. வாழைத்தார்களின் விலை உயர்வால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.