மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மகளிர் குழுவிற்கு கட்டிடம் கேட்டு ஏராளமான பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் எம்.பழையன்குளம் கிராமத்தில் மகளிர் குழுவுக்கு என தனியாக கட்டடம் கட்டப்பட்டது.
தற்போது இந்த கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கட்டடத்தில் ரேஷன் கடை அமைக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்து வருகிறது.
இதையடுத்துத்து முக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வசந்தா தலைமையில் ஏராளமான பெண்கள் திருப்புவனத்துக்கு திரண்டு வந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
எம்.பறையன்குளம் கிராமத்தில் மகளிர் குழுவுக்கு என கட்டப்பட்ட கட்டடத்தை மகளிர் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கை குறித்த மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் அவர்கள் கொடுத்தனர். மனு மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.