அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர்.
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(40). இவர், ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் எனும் ஊரில் உள்ள தனது குலசாமியைக் கும்பிடுவதற்காக தானும், தனது குடும்பத்தார் உள்பட மொத்தம் 6 பேருடன் ஒரு வேனில் சனிக்கிழமை இரவு சென்னையிலிருந்து கிளம்பினராம். வேனை திருவள்ளூரைச் சேர்ந்த செல்லா என்பவர் ஓட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அவர்கள் வந்த வேனானது அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி கிராம 4 வழிச்சாலை சந்திப்பில் வந்துகொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப்பள்ளத்தில் குப்புறக்கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சதீஷ்குமார் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் 6 பேரும் காயமடைந்தனர். ஓட்டுநர் செல்லாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 அவசர மீட்பு வாகனம் மூலம் 6 பேரும் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர்கள்,சுய விருப்பப்பத்தின்படி, அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர்,வேன் ஓட்டுநர் செல்லாவிடம் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.