கம்பம்: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தொடர்மழை பெய்வதால் அணைக்குள் நீர்வரத்து அதிகரித்தது, அதே நேரத்தில் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்ததால் மின்சார உற்பத்தி குறைந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது, இதன் எதிரொலியாக அணைக்குள் நீர்வரத்து அதிகரித்தது.
பெரியாறு அணையில் 17.2 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 9.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, முல்லைப்பரியாறு அணையின் நீர்மட்டம், 126.55 அணியாகவும்,(மொத்த உயரம் 142 அடி), நீர் இருப்பு 3, 953 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2,203 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,200 கன அடியாகவும் இருந்தது.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், லோயர் கேம்பில் உள்ள பெரியார் மின்சார உற்பத்தி நிலையத்தில் மூன்று மின்னாக்கிகள் மூலம், 42, 42, 24 மெகாவாட் என மொத்தம், 108 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
கடந்த ஜுன் 16 முதல் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஞாயிற்றுக்கிழமை முதல் 108 மெகாவாட்டாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.