இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இந்திய கிரிக்கெட்டின் பிரதான அணி இங்கிலாந்தில் உள்ள நிலையில், ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுகிறார்.
ஒரே நேரத்தில் இரண்டு இந்திய அணிகள் இரண்டு தொடர்களில் விளையாடுவது இதுவே முதன்முறை. இதனால், இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் இன்று கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 50 ஓவர் முடிவில் இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை எடுத்தது.
பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, பிரித்வி ஷா பட்டாசாய் வெடித்து 24 பந்துகளில் 43 ரன்களுடன் வெளியேறினார். இதில் 9 பவுண்ட்ரிகள் அடக்கம். இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்ற எந்தவித பயமுமின்றி முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்கவிட்டவர் 42 பந்துகளில் 59 ரன்களுடன் வெளியேறினார். இதில், 2 சிக்ஸர்களும், 8 பவுண்டரிகளும் அடக்கம்.
பிறகு மெல்ல மெல்ல வேகம் காட்ட தொடங்கிய கேப்டன் தவானும் தனது அரைசதத்தை நிறைவு செய்து, 86 ரன்களுடன் களத்தில் நிற்க, இந்திய அணி 36.4 ஆவது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 263 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஒருநாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.