புதுச்சேரியில் பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி ஏஐடியூசி சங்கங்களின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் தொடர் விலை ஏற்றம் காரணமாக தற்போது பெட்ரோல் லிட்டர் ரூ. 95.81க்கும், டீசல் ரூ.90.08 க்கும் விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு காரணமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது.
இதனை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளாமல், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து தொழிலை நம்பி உள்ள ஆட்டோ ,பேருந்து, லாரி,லோடு கேரியர் ,சுற்றுலா வாகனம் ஆகிய தொழில்கள் முடங்குவது மட்டுமின்றி, போக்குவரத்து கட்டணமும் உயரக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே, மத்திய பாஜக அரசு உயர்த்திய பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசைக்கண்டித்தும், புதுச்சேரியில் ஏஐடியுசி ஆட்டோ, சுற்றுலா வாகனம், லோடு கேரியர் ஆகிய சங்கங்களின் சார்பில், வியாழக்கிழமை பாக்கமுடையான்பட்டு பகுதியில் நூதன போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஆட்டோ சங்க தலைவர் சேகர், நகர பேருந்து தொழிலாளர் சங்க தலைவர் மரி கிரிஸ்டோபர், சுற்றுலா வாகன சங்க செயலாளர் தமிழ்மணி, லோடு கேரியர் சங்க செயலாளர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷேகம், ஏஐடியுசி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாட்டு வண்டி, மினி லாரியுடன் வந்து தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.