சென்னை: சமூக ஊடகங்களில் ஆபாசமாகப் பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த மதன், தர்மபுரியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.
மதனின் யூ-டியூப் சேனல்களில் பெண்கள் குறித்த ஆபாசமாகப் பேசும் விடியோ, ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகின. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து வடபழனியைச் சேர்ந்த பி.கே.அபிஷேக் ரவி, சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் அண்மையில் புகார் செய்தார்.
சைபர் குற்றப்பிரிவு மதன் மீது ஆபாசமாக பேசுதல், தடை செய்யப்பட்ட செயலிகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து மதனை, கைது செய்வதற்கு தீவிரம் காட்டி வந்தனர். அதேவேளையில் மதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், இரு சேனல்களுக்கும் நிர்வாகியாக மதனின் மனைவி கிருத்திகா இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சேலத்தில் தலைமறைவாக இருந்த கிருத்திகாவை காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
இதற்கிடையே, சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர், தர்மபுரியில் நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த மதனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து இரு கார்கள், 3 மடிக்கணினிகள், ஒரு “டிரோன் கேமரா” ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மதனை காவல்துறையினர், சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட மதனை காவல்துறையினர், சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆபாசமாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதனின் 5 யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.