மன்னார்குடி பகுதியில் கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் கோவில்கள் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் பக்தர்களின் வழிப் பாட்டுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
கடந்த வாரம் முதல் திருவாரூர் , தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் ஊரடங்கிலிருந்து பலவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தும் இந்து முன்னனியினர்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் பக்தர்கள் சென்று வழிப்பாடு செய்ய கோவில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில் முன்பு சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் முன் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ரமேஷ் , ருக்மணி பாளையம் பரமநாயகி கோவிலில் நகரச் செயலர் கென்னடி ,ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகர் கோவிலில் மாவட்ட துணைச் செயலர் மாரி முத்து ஆகியோர் தலைமையிலும் மொத்தம் 6 இடங்களிலும், வடுவூர் கோதண்டராமசுவாமி கோலிலில் நீடாமங்கலம் ஒன்றியச் செயலர் முருகையன் தலைமையிலும் , கோட்டூரில் கொழுந்தீஸ்வர் கோவிலில் கோட்டூர் ஒன்றியச் செயலர் ராஜேந்திரன் தலைமையிலும் சூடம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.