சேலம் மாவட்டத்தில் அதிமுக கட்சி சார்பாக 450 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி சார்பாக கரோனா நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில், கரோனா பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 450 மாற்றுத் திறனாளிகளுக்கு அதிமுக கட்சி சார்பாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். இதில், 10 கிலோ அரிசி, மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிப் தொகுப்பு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமர வைக்கப்பட்டு கரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மணி மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.